ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார், நல்லதம்பி கோனார், சுப்பிரமணிய கோனார், தலைமை கணக்கர் தனுஷ்கோடியா பிள்ளை முயற்சியால் வாங்கப் பட்டது,'' என்கிறார் சங்க செயல்பாடுகளை அறிந்த வரதராஜன்.மதுரை ஆட்டிறைச்சி சங்கம், தமிழகத்தில் உள்ள இறைச்சி வணிக சங்கங்களில் மிகப்பெரியதும், தென்னகத்தில் பெயர் பெற்றதுமாகும். 1953-54ல் ஆட்டிறைச்சிக்கு அரசு விதித்த வரியை விலக்க,திருப்பூரில் அமைச்சர் ரோச்விக்டோரியா தலைமையில் மாநாடு நடத்தி, சாதித்து காட்டி சாதனை படைத்தது இச்சங்கம்.சங்க உறுப்பினர்களுக்கு இலவச தராசு, படிக்கற்கள், வட்டியில்லா கடன், உறுப்பினர்கள் மறைவிற்கு இறுதிச்சடங்கு செலவு பல உதவிகளை சங்கம் பார்த்துக் கொள்கிறது. ஆடறுக்கும் போது சிந்தும் ரத்தத்தை சேகரித்து, விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி திருவிழாவில், பிரசாதம் வழங்குகின்றனர். ஜாதி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோனார்கள், பிரமலைக் கள்ளர்கள், முஸ்லிம்கள் இணைந்து சங்க பொறுப்புகளை கவனிக்கின்றனர். இன்று 450 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ந.முத்துராமலிங்கம், செயலாளராக ரா.நவநீதனும் உள்ளனர்.
No comments:
Post a Comment