தேனி மாவட்டத்தில் ஆடு திருட்டு வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மெத்தனம் காட்டி வருவதாக ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அதன் விவரம்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மந்தைகளில் இருந்து ஆடுகள் திருடு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து வீரபாண்டி, ஜெயமங்கலம், கண்டமனூர், போடி ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் மந்தையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை காவலாளிகளை மிரட்டி, வாகனத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் குறித்தும், இதற்கு பயன்படுத்தும் வாகன எண்ணை குறிப்பிட்டும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திருடு போன ஆடுகளை மீட்டுத் தரவும் போலீஸார் மெத்தனம் காட்டுகின்றனர். எனவே ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, ஆடு வளர்ப்பு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். மனு அளித்த போது ஆடு வளர்ப்போர் செம்மறி ஆடுகளுடன் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment